Sunday, May 30, 2010
அடப்போங்கப்பா - 1 இந்தியக்குடிமகன்
பத்து ரூபாய்க்கு ‘பரவாயில்லை’ ரக அரிசி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், இன்று ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி 'பிரமாதமான’ சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்;
வரைமுறை இல்லாமல் தரப்படும் ‘ஓசி’ டிவி வாங்கி, அப்பொழுதே விற்று, அந்தக் காசில் அடுத்த மாத வடகையை அட்ஜஸ்ட் செய்கிறான்;
அட, கிடைப்பதே ஒரு நாள் விடுமுறை, அன்றும் வரிசையில் நின்று அப்படி ஓட்டுப் போட்டுத்தான் ஆகவேண்டுமா என தூங்கிக் கழிக்கிறான்;
வீட்டின் குடைச்சல், கடன் தொல்லை, அலுவலகச் சுமை என அனைத்தையும் ஒரு ‘குவாட்டரில்’அப்போதைக்கு கரைத்து விடுகிறான்;
அதே ‘அரசு’ மதுபானக்கடையில் தன் ’பட்டதாரி’ தம்பிக்கு அரசு ‘வேலை’ போட்டு கொடுத்ததும், ‘சந்தோசத்தில்’ இன்னொரு ரவுண்டு விடுகிறான்;
பேருந்து, மின்சாரம் என எங்கு அதிகக் கட்டணம் கேட்டாலும், விதியே என கேள்வி கேட்காமல் கொடுத்து விடுகிறான்;
ஆக, ’நிலையான அரசு’, ’போக்குவரத்துத் துறையில் லாபம்’, ’சாராயத் துறையில் லாபம்’, ‘மின்சாரத் துறையில் லாபம்’ எனப் பல பெருமைகளை வழங்கி, தான் அழிந்து கொண்டிருக்கிறான்;
அவன் தான் ‘சாதாரண குடிமகன்’ - ஓ, மன்னியுங்கள்; ‘சதா’-’ரண’-’குடி’மகன் !
அடப்போங்கப்பா.... நீங்களும் உங்கள் அரசாங்கமும்!!
~ ப்ரியமுடன்,
பாலா
Tuesday, May 25, 2010
நட்பு
என் ஆருயிர்த் தோழி ஒருத்தி, அழகாய் வளர்த்தாள் தன் விரல் நகத்தை;
அது அவளுக்கும், அவள் அதற்குமென அழகு சேர்த்துக் கொண்டனர்;
சட்டென்று ஒரு நாள், பட்டென்று அதனை வெட்டி எறிந்துவிட்டாள்.
காரணம் கேட்டேன்; ’பிடிக்கவில்லை’ என்றாள்.
மற்றொரு நாள், என் நட்பையும் அவ்வாறு வெட்டி எறிந்த போதுதான்
உணர்ந்தேன்
- அந்த நகம் எவ்வளவு துடித்திருக்குமென்று...!
-ப்ரியமுடன்,
பாலா
(கல்லூரிக் காலத்தில் எழுதியது)
Subscribe to:
Posts (Atom)