Saturday, November 27, 2010

திருமணம்



வயது ஏற ஏற, சோம்பேறித்தனம் ஏறிக்கொண்டே போகின்றது.
வெட்டியாக இருந்தாலும் ஏதேனும் எழுதத் தோன்றுவதில்லை.
அதனால் தான் ஒவ்வொரு பதிவிற்கும் இடையே நீண்ட இடைவெளி.


சென்ற வாரம் என் தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால், விடுப்பு எடுக்காமல் சமாளித்தாக வேண்டிய கட்டாயம்.

எனவே அலுவலகம் சென்று, பாதி வேலை முடித்து, மீதியை சரிகட்ட ஆள் பிடித்து,அடித்து பிடித்து, விமானம் பிடிக்க ஓடினேன்.

இந்தியாவில் இருந்தால் முடிந்தளவு நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.


டில்லி, பெங்களூரூ, சென்னை யை சேர்ந்த மூன்று நண்பர்கள்
நாங்கள் கோவையில் சந்தித்தோம்.

அங்கிருந்து உடுமலைக்கு காரில் செல்வதென ஏற்பாடு. கோவையில் இரவு உணவு முடித்து விட்டுக் கிளம்பினோம்.

வாங்கண்ணா, போங்கண்ணா என கோவைத் தமிழில் தான் என்ன சுகம்.

வழி முழுக்க சொந்தக் கதை, சோகக் கதை (வேறென்ன, அவரவர் பணிச் சுமைகள் தான்), சினிமா, அரசியல் என அடி கிளப்பினோம்.மிக இனிமையான பயணம்.


மந்தை ஆடுகள் தான் பிரிந்து சேரும் போது பேச முடிவதில்லை. நாங்கள் அப்படியள்ள.
சில நண்பர்களுடன் சேர்ந்தால் இரவு நீளாதா எனும்படி பேசிக்கொண்டே இருப்போம்.

வழக்கம் போல் மண்டபத்தில் தோழியை கிண்டலடித்து, சில பல திட்டுகளை வாங்கிக் கொண்டு உறங்கச் சென்றோம்.

என் நண்பர்கள் அதிகாலையில் எழுந்து, முகூர்த்தத்திற்கு முன்னரே சென்ற அதிசயம் நடந்தது. அதற்கான அவசியமும் இருந்தது. ஏனெனில் இவ்வளவு தூரம் வந்து முகூர்த்தத்திற்கு தாமதமாக வருவதில் அர்த்தம் இருக்காது;  தோழியிடம் திட்டு வாங்க முடியாது;  திரும்பவும் அடித்து பிடித்து மூவரும் விமானம் பிடித்து டில்லி, பெங்களூரூ, சென்னை செல்ல வேண்டும் - அலுவலக, குடும்ப நிர்பந்தங்கள்.

முகூர்த்தத்திற்கு முன்னரே சென்று, திருமணத்தைக் கண்ணாறக் கண்டு, வயிறாற உண்டு,
திரும்பவும் கோவை வந்து ஆளுக்கொரு திசையில் பறந்தோம்.


அட ஆயிரம் சொல்லுங்கள், நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்வதில் உள்ள இன்பம் வேறெதிலும் இருப்பதில்லை; அங்கு அனைத்து நண்பர்களும் வந்தால் கொண்டாட்டங்கள் அளவில்லை.

இந்த முறை எதிர்பார்த்த நண்பர்கள் பலர் வராததால் கொண்டாட்டங்கள் குறைவு என்றாலும்,  தோழியின் திருமணத்தில் கலந்து கொண்ட மனநிறைவு முழுமையாய் இருந்தது - ஏனெனில்

சில ஆண்டுகள் முன் மற்றொரு தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத போது ஏற்பட்ட மனச்சுமை இன்னும் ஓர் ஓரத்தில் இருக்கிறது.


என்னைப் பொறுத்தவரை, நண்பர்களின் சுற்றுலாக்கள், இதர விழாக்களில் கலந்து கொள்ள முடியாதது காயம் - உள்ளாறும்;

நண்பர்களின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாதது வடு - ஆறாது!


உள்ளூரில் வேலை செய்த நம் முந்தைய தலைமுறை குறைவாய் வருவாய் ஈட்டினாலும் பற்பல நண்பர், உறவினர்களை பெருக்கிக் கொண்டே சென்றது;

உலக மயமான நமது தலைமுறை வருவாயை பெருக்கிக் கொண்டே சென்றாலும்,    இருக்கும் நண்பர், உறவினர்களை ஈட்டியால் குத்த வேண்டிய கட்டாயத்தில் செல்கின்றது, தனக்குத் தெரியாமலேயே !!


~ ப்ரியமுடன்,

பாலா

Sunday, September 26, 2010

எண்ணங்கள்

                                           



அலுவலகம், அலுவல்கள்,


அலுவலக சினேகங்கள்,

மற்ற நண்பர்கள்,

குடும்பம்,உறவினர்,

சமூகம், அரசியல்,

விளையாட்டு,பொழுதுபோக்கு,

தூக்கம். . . . .

என இவற்றையெல்லாம் தாண்டி

என்னைப் பற்றி எண்ண

சில மணித்துளிகளே மிச்சமுள்ளன.



அவ்வாறு என்னைப் பற்றி

எண்ணும்போதெல்லாம்

உன்னைப் பற்றிய நினைவுகளை

விலக்க முடிவதில்லை.



அப்போது, உன்னைப் பற்றிய

என் மனதின் கேள்விகளுக்கு

என்னிடம் பதில் இல்லாததால்...



இப்போதெல்லாம் நான்

என்னைப் பற்றி

எண்ணுவதில்லை.


-ப்ரியமுடன்,

பாலா

Saturday, August 14, 2010

அடப்போங்கப்பா - 2 உள்நாட்டு தீவிரவாதம்






”டமால். .. ... ”




கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்க

காத்திருந்த காதலன்,


காதலுடன் கண்களால் தேனிலவு

கொண்டாடிய புதுமணத் தம்பதியர்,


அவசர சிகிச்சைக்காக அன்னையின்

அரவணைப்பில் சென்ற பாலகன்,


ஆச்சரியம் தர ஒரு மாத விடுமுறையில்

ஆடம்பரமாய் சென்ற நகரத்து ஊழியன்,


முதல் கூடைப் பூவையாவது முழுவதுமாய்

விற்றுவிட முயன்ற மூதாட்டி,


மூத்த மகனின் வீட்டிலிருந்து அடுத்த மாத உணவிற்கு

இளைய மகன் வீட்டிற்கு சென்ற பெற்றோர்,



- என அனைவரின் கனவுகளும், வாழ்க்கையும்

முடிந்து போனது,



அவர்களுக்கு இருந்த, இல்லாத உறவினர்,

நண்பர் நிம்மதியும் முற்றும் பெற்றது,



நீங்கள் ஒற்றைத் தண்டவாளக் கட்டையை உருவியதால்!!





போராளி என்றோ, நக்சல் என்றோ,

மாற்றுக் குழு என்றோ, மாவோயிஸ்ட் என்றோ


பலபேர் பலவாறு உங்களை அழைக்கலாம்,



முன்னாள் நடிகையோ, மூத்த பத்திரிக்கையாளரோ

முழுவதுமாய் உங்களை ஆதரிக்கலாம்,



மாநில அரசுகள் தங்களைக் காப்பாற்ற

மத்திய அரசைச் சாடலாம்,



மத்திய அமைச்சரவை கூடி

அதிரடி நடவடிக்கை வேண்டும் என்றும்,

மண்ணின் மைந்தர்கள் மீது

ராணுவ நடவடிக்கை கூடாது என்றும்,

விவாதித்து முடிவு ஏதும்

எடுக்காமல் முடிந்தும் போகலாம்.




ஆனால் ஒன்று. . . .



கேட்க நாதியற்ற சராசரி இந்தியனையோ,

கடைநிலையில் உள்ள ராணுவ வீரனையோ,


நீங்கள் குறி வைக்கும் வரை

உங்களுக்கு கவலையில்லை.



தப்பித் தவறி சினிமா நட்சத்திரத்தையோ

மாநில மத்திய அரசியல்வாதியையோ

தீண்டி விடாதீர்கள். . . .



பின்னர் மாநில மத்திய

காவல்துறைகள் மட்டுமன்றி

சிறப்பு அதிரடிப் படைகளும்

உள்நாட்டு வெளிநாட்டு ராணுவமும்

உங்களைத் தேடக் கூடும்...


சர்வதேசத் தீவிரவாதியென

அறிவிக்கக் கூடும்...


உங்கள் தாய்தந்தையரையும்,

உற்றார் உறவினரையும்,

வெளிநாடு செல்லவோ

உள்நாடு திரும்பவோ

அனுமதி மறுக்கக் கூடும்...



ஆகவே ஆன்றோரே சான்றோரே....


மறந்து விடாதீர். .

மறந்தும் இருந்து விடாதீர். .



தப்பித் தவறி சினிமா நட்சத்திரத்தையோ

மாநில மத்திய அரசியல்வாதியையோ

தீண்டி விடாதீர்கள். . . . !!



அடப்போங்கப்பா நீங்களும்

உங்கள் கோட்பாடுகளும்.. . .!!!!

 
 
 
~ ப்ரியமுடன்,


பாலா

Sunday, May 30, 2010

அடப்போங்கப்பா - 1 இந்தியக்குடிமகன்


பத்து ரூபாய்க்கு ‘பரவாயில்லை’ ரக அரிசி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், இன்று ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி 'பிரமாதமான’ சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்;

வரைமுறை இல்லாமல் தரப்படும் ‘ஓசி’ டிவி வாங்கி, அப்பொழுதே விற்று, அந்தக் காசில் அடுத்த மாத வடகையை அட்ஜஸ்ட் செய்கிறான்;

அட, கிடைப்பதே ஒரு நாள் விடுமுறை, அன்றும் வரிசையில் நின்று அப்படி ஓட்டுப் போட்டுத்தான் ஆகவேண்டுமா என தூங்கிக் கழிக்கிறான்;

வீட்டின் குடைச்சல், கடன் தொல்லை, அலுவலகச் சுமை என அனைத்தையும் ஒரு ‘குவாட்டரில்’அப்போதைக்கு கரைத்து விடுகிறான்;

அதே ‘அரசு’ மதுபானக்கடையில் தன் ’பட்டதாரி’ தம்பிக்கு அரசு ‘வேலை’ போட்டு கொடுத்ததும், ‘சந்தோசத்தில்’ இன்னொரு ரவுண்டு விடுகிறான்;

பேருந்து, மின்சாரம் என எங்கு அதிகக் கட்டணம் கேட்டாலும், விதியே என கேள்வி கேட்காமல் கொடுத்து விடுகிறான்;



ஆக, ’நிலையான அரசு’, ’போக்குவரத்துத் துறையில் லாபம்’, ’சாராயத் துறையில் லாபம்’, ‘மின்சாரத் துறையில் லாபம்’ எனப் பல பெருமைகளை வழங்கி, தான் அழிந்து கொண்டிருக்கிறான்;

அவன் தான் ‘சாதாரண குடிமகன்’ - ஓ, மன்னியுங்கள்; ‘சதா’-’ரண’-’குடி’மகன் !


அடப்போங்கப்பா.... நீங்களும் உங்கள் அரசாங்கமும்!!


~ ப்ரியமுடன்,
பாலா

Tuesday, May 25, 2010

நட்பு



என் ஆருயிர்த் தோழி ஒருத்தி, அழகாய் வளர்த்தாள் தன் விரல் நகத்தை;

அது அவளுக்கும், அவள் அதற்குமென அழகு சேர்த்துக் கொண்டனர்;

சட்டென்று ஒரு நாள், பட்டென்று அதனை வெட்டி எறிந்துவிட்டாள்.

காரணம் கேட்டேன்; ’பிடிக்கவில்லை’ என்றாள்.

மற்றொரு நாள், என் நட்பையும் அவ்வாறு வெட்டி எறிந்த போதுதான்
உணர்ந்தேன்
- அந்த நகம் எவ்வளவு துடித்திருக்குமென்று...!


-ப்ரியமுடன்,
பாலா
(கல்லூரிக் காலத்தில் எழுதியது)

Friday, April 23, 2010

அன்புள்ள சச்சின் . .




நம் தலைமுறைக்கும், நம் முந்தைய பிந்தைய தலைமுறைக்கும் இந்தநாள் வருடத்தில்
ஆனந்தம் தரும் நாள் ..
ஆம், நம் அன்பு சச்சினின் பிறந்தநாள் .. அவரைப்பற்றி பலமுறை கேட்டாலும் , படித்தாலும் இன்னும் ஒரு முறை பேச மனம் படபடக்கும்.

அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியைப்பற்றி கேள்விபட்டாலும், இப்போது தான் பார்க்கிறோம் இந்திய கிரிக்கெட்டின் அமுத சுரபியை - சச்சின் வடிவத்தில்.!!

சச்சினின் கடந்த கால சாதனைகளைக் காட்டிலும், நிகழ்காலச் சாதனைகள் நம்மை பிரம்மிக்க
வைக்கின்றன. ஏனென்றால், வயதால் உடல் தளர்ந்தாலும் மனம் தளராத சாதனைகளே
மனிமகுடத்தின் வைரங்களாய் மின்னும்.

"இங்குள்ள ரசிகர்கள் சென்னை வெல்ல வேண்டும் என்று விரும்பினாலும், சச்சின்
சதம் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்" என்று சென்னை/மும்பை ஐபிஎல் போட்டியில் கவாஸ்கர் சொன்னது எவ்வளவு உண்மை !!

கடந்த ஒரு வருடமாய் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும்
சச்சின், இந்த வருடமும் நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்று
"சுயநலத்துடன்" இறைவனை வேண்டுகிறேன்..!
~ ப்ரியமுடன்,
பாலா


வணக்கம்


எல்லோரும்தான் எழுதுகிறார்கள், நாம் என்ன செய்ய என்று எழுதிவிடத் தோன்றவில்லை.

நமக்கு எதற்கு இந்த வீண் வேலை என்று சும்மா இருந்து விடவும் முடியவில்லை.

நண்பர்களுக்காக தொடங்கிவிட்டேன். . . உங்கள் வாழ்த்துக்களுடன் !

அடடே . . . சொல்ல மறந்துவிட்டேன் . . . வணக்கம் !!

அடிக்கடி (??? !!) சந்திப்போம்; முடிந்தால் சிலவற்றை பற்றி ஆலோசிப்போம்; சிந்திப்போம்;

~ ப்ரியமுடன்,
பாலா