”டமால். .. ... ”
கனவுகளுடன் வாழ்க்கையைத் தொடங்க
காத்திருந்த காதலன்,
காதலுடன் கண்களால் தேனிலவு
கொண்டாடிய புதுமணத் தம்பதியர்,
அவசர சிகிச்சைக்காக அன்னையின்
அரவணைப்பில் சென்ற பாலகன்,
ஆச்சரியம் தர ஒரு மாத விடுமுறையில்
ஆடம்பரமாய் சென்ற நகரத்து ஊழியன்,
முதல் கூடைப் பூவையாவது முழுவதுமாய்
விற்றுவிட முயன்ற மூதாட்டி,
மூத்த மகனின் வீட்டிலிருந்து அடுத்த மாத உணவிற்கு
இளைய மகன் வீட்டிற்கு சென்ற பெற்றோர்,
- என அனைவரின் கனவுகளும், வாழ்க்கையும்
முடிந்து போனது,
அவர்களுக்கு இருந்த, இல்லாத உறவினர்,
நண்பர் நிம்மதியும் முற்றும் பெற்றது,
நீங்கள் ஒற்றைத் தண்டவாளக் கட்டையை உருவியதால்!!
போராளி என்றோ, நக்சல் என்றோ,
மாற்றுக் குழு என்றோ, மாவோயிஸ்ட் என்றோ
பலபேர் பலவாறு உங்களை அழைக்கலாம்,
முன்னாள் நடிகையோ, மூத்த பத்திரிக்கையாளரோ
முழுவதுமாய் உங்களை ஆதரிக்கலாம்,
மாநில அரசுகள் தங்களைக் காப்பாற்ற
மத்திய அரசைச் சாடலாம்,
மத்திய அமைச்சரவை கூடி
அதிரடி நடவடிக்கை வேண்டும் என்றும்,
மண்ணின் மைந்தர்கள் மீது
ராணுவ நடவடிக்கை கூடாது என்றும்,
விவாதித்து முடிவு ஏதும்
எடுக்காமல் முடிந்தும் போகலாம்.
ஆனால் ஒன்று. . . .
கேட்க நாதியற்ற சராசரி இந்தியனையோ,
கடைநிலையில் உள்ள ராணுவ வீரனையோ,
நீங்கள் குறி வைக்கும் வரை
உங்களுக்கு கவலையில்லை.
தப்பித் தவறி சினிமா நட்சத்திரத்தையோ
மாநில மத்திய அரசியல்வாதியையோ
தீண்டி விடாதீர்கள். . . .
பின்னர் மாநில மத்திய
காவல்துறைகள் மட்டுமன்றி
சிறப்பு அதிரடிப் படைகளும்
உள்நாட்டு வெளிநாட்டு ராணுவமும்
உங்களைத் தேடக் கூடும்...
சர்வதேசத் தீவிரவாதியென
அறிவிக்கக் கூடும்...
உங்கள் தாய்தந்தையரையும்,
உற்றார் உறவினரையும்,
வெளிநாடு செல்லவோ
உள்நாடு திரும்பவோ
அனுமதி மறுக்கக் கூடும்...
ஆகவே ஆன்றோரே சான்றோரே....
மறந்து விடாதீர். .
மறந்தும் இருந்து விடாதீர். .
தப்பித் தவறி சினிமா நட்சத்திரத்தையோ
மாநில மத்திய அரசியல்வாதியையோ
தீண்டி விடாதீர்கள். . . . !!
அடப்போங்கப்பா நீங்களும்
உங்கள் கோட்பாடுகளும்.. . .!!!!
பாலா